ETV Bharat / state

திருமணம் மீறிய உறவு - 12 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்த இளைஞர்

author img

By

Published : Aug 3, 2021, 8:28 PM IST

காஞ்சிபுரத்தில் சகோதரியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சகோதரியின் திருமணத்தை மீறிய உறவு
சகோதரியின் திருமணத்தை மீறிய உறவு

காஞ்சிபுரம்: சின்ன ஐயங்குளத்தைச் சேர்ந்தவர் வரதன் (38). இவரது மனைவி ஷீலா (33). இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு வரதனின் மனைவி ஷீலாவுக்கும், கனகராஜ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது.

இதனையறிந்த வரதன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், ஷீலா தொடர்ந்து கனகராஜுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், வரதன் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தேனம்பாக்கத்தில் தனியாக வசிக்கத் தொடங்கினார். இதனை தனக்கு சாதகமாக்கிய ஷீலா, கனகராஜூடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து மதுபோதைக்கு அடிமையாகியுள்ளனர்.

கனகராஜூடன் வாக்குவாதம்

இந்த கொடுமையை தனது 10 வயதிலிருந்தே பார்த்து வந்த ஷீலாவின் தம்பி ராஜ், இது குறித்து வெளியில் சொல்ல முடியாமல் பெரும் மனவேதனையுடன் தவித்து வந்துள்ளார். மேலும், தனது சகோதிரி ஷீலா குறித்து ஊர் மக்கள் அவதூறாக பேசுவதையும், இத்தனை ஆண்டுகளாக அவர் சகித்துக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 02) ஷீலாவின் தம்பி ராஜ், அவரது நண்பர் உதயகுமார், கனகராஜ் ஆகியோர் கூட்டாக அமர்ந்து ஷீலாவின் வீட்டருகே மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் ராஜுக்கும், கனகராஜுக்கும் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதில் ஆத்திரமடைந்த ராஜ், தனது கையிலிருந்த பீர் பாட்டிலை கனகராஜின் தலையில் உடைத்து, முகம், கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு, அருகிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து கனகராஜின் முகத்தில் போட்டு தனது ஆத்திரம் தீர கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், கனகராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள ராஜ், அவரது நண்பர் உதயகுமார் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் நடந்த 10 கொலை சம்பங்களில் 5க்கும் மேற்பட்ட கொலைகள் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.